மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக ஆடி இருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அதிரடி துவக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு இந்திய டி20 அணியில் மீண்டும் இடம் அளிக்கப்படவில்லை. தற்போது இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
அதில் டி20 தொடருக்கான அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அகர்கர், ஒரு அணியில் 15 வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என கறாராக கூறினார். அதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தோனியால் பட்டை தீட்டப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தற்போது டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அவர் அதிக ரன் குவித்து வருகிறார். மேலும், அவரது தலைமை பண்பை கவனித்த தோனி, அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் நியமித்து இருக்கிறார். ஐபிஎல் உலகில் அவர் முன்னணி வீரராக இருக்கும் நிலையில், இந்திய அணியில் அவர் புறம் தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு இருக்கிறார்.
ஜிம்பாப்வே தொடரில் மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்த அவர் அதில் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்திருந்தார். ஒருமுறை 77 ரன்களும், மற்றொரு முறை 49 ரன்களும் குவித்து இருந்தார். மேலும், மூன்றாம் வரிசை நான்காம் வரிசை என எந்த இடத்தில் ஆடினாலும் அவர் சிறப்பாக ரன் குவித்து தனது ஃபார்மை நிரூபித்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல ஜிம்பாப்பே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக சதம் அடித்த அபிஷேக் சர்மாவுக்கும் மாற்று வீரராக கூட இலங்கை தொடரில் இடம் கிடைக்கவில்லை. அதற்கு பதில் அளித்த அஜித் அகர்கர், "எந்த ஒரு வீரரையும் அணியை விட்டு நீக்கினால், அவர்கள் கடினமாக தான் உணர்வார்கள். ரிங்கு சிங்கையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால், டி20 உலகக் கோப்பையில் அவரை நாங்கள் தேர்வு செய்யவில்லை. எங்களால் 15 வீரர்கள் கொண்ட அணியை மட்டுமே தேர்வு செய்ய முடியும்." என்று கூறினார்.