துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயலுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 'ஜென்டில்மேன் விளையாட்டு' என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில், வெற்றி தோல்விகளைத் தாண்டி விளையாட்டு உணர்வுக்கு (Spirit of Cricket) எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.
அந்த உயரிய பண்பை, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆசியக் கோப்பை களத்தில் வெளிப்படுத்தி, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். மூன்றாவது நடுவரால் அவுட் என அறிவிக்கப்பட்ட பிறகும், எதிரணி வீரருக்கான தனது அப்பீலைத் திரும்பப் பெற்று, அவர் ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம், ஐக்கிய அரபு அமீரக இன்னிங்ஸின் 13-வது ஓவரில் நிகழ்ந்தது. அந்த ஓவரை இந்திய ஆல்-ரவுண்டர் சிவம் துபே வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீசுவதற்காக சிவம் துபே ஓடிவந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால்சட்டையில் இருந்து அவரது துண்டு (towel) கீழே விழுந்தது.
அந்த நேரத்தில் பேட்டிங் செய்துகொண்டிருந்த 10-ம் நிலை வீரர் ஜுனைத் சித்திக், பந்துவீச்சாளரின் கவனச்சிதறல் குறித்து நடுவரிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். அவர் கிரீஸை விட்டு வெளியே நிற்பதைக் கவனித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சமயோஜிதமாகச் செயல்பட்டு பந்தைப் பிடித்து ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன் அவுட் செய்தார்.
கள நடுவர் முடிவை மூன்றாவது நடுவருக்குப் பரிந்துரைக்க, தொலைக்காட்சி ரீப்ளேக்களை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், ஜுனைத் சித்திக்கை 'அவுட்' என அறிவித்தார்.
மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துவிட்டதால், அந்த விக்கெட் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், இந்த சூழலில் தான் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அந்த எதிர்பார்க்காத முடிவை எடுத்தார். பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் செயலால் உண்மையிலேயே கவனச்சிதறலுக்கு ஆளானார் என்பதை உணர்ந்த சூர்யகுமார், நடுவர்களிடம் சென்று தனது அப்பீலைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
உடனடியாக, அவுட் முடிவு திரும்பப் பெறப்பட்டு, ஜுனைத் சித்திக் மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார். சூர்யகுமாரின் இந்தச் செயல், விளையாட்டு உணர்வின் உச்சமாகப் பார்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. ஆனால், விதி வலியது என்பார்களே, அதுபோல, இந்த சம்பவத்திற்குப் பிறகு வெறும் இரண்டு பந்துகள் கழித்து, அதே ஜுனைத் சித்திக், சிவம் துபேவின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சிலும், இந்திய அணி இந்தப் போட்டியில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 57 ரன்களுக்கு சுருட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியைக் காட்டிலும், சூர்யகுமார் யாதவின் இந்த மனிதாபிமான செயல் தான் போட்டியின் மிக முக்கிய தருணமாகப் பேசப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் சிவம் துபே பந்துவீச்சில் தனித்துவமாக ஜொலித்தார். ரிங்கு சிங்கிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அவர், தனக்குக் கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்டார். பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு உதவியாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட அவர், தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வெறும் 2 ஓவர்கள் வீசி, 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். அவரது இந்த அபாரமான ஆட்டம், அணியில் அவரது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
போட்டி வெறும் 4.3 ஓவர்களில் முடிந்தாலும், இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு, மூன்றாவது வீரராக திலக் வர்மா அல்லது சஞ்சு சாம்சன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தானே முன்வந்து களமிறங்கினார். இது, அணியில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் நிலை குறித்த சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளது.