மும்பை : சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களான மெக்ராத், மலிங்கா உள்ளிட்டோர் வரிசையில் இந்திய வீரர் பும்ராவை பார்ப்பதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற நட்சத்திர வீரர் முக்கிய காரணமாக அமைந்தார். ஏனென்றால் நியூயார்க் மைதானத்தில் சிறந்த பவுலிங் யூனிட்டை வைத்துள்ள அணியால் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தாலும், பும்ரா மூலம் எதிரணிக்கு ரோகித் சர்மா சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார்.

கிட்டத்தட்ட 10 மாதங்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன் இந்திய அணிக்கு திரும்பினார். அதுவரை பும்ராவால் மீண்டும் பழைய மாதிரி பவுலிங் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் பும்ரா தனது பவுலிங் மூலமாக ஒட்டுமொத்த உலகிற்கும் பதிலடி கொடுத்து வந்தார்.
பவுலர்களுக்கு சாதகம் இல்லாத பிட்ச்களில் கூட பும்ரா அசால்ட்டாக பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தார். டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று 3 வகையான கிரிக்கெட் வடிவங்களிலும் பும்ராவின் பவுலிங் வேற மாதிரி அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பவுலரை இந்திய அணி கொண்டிருக்கவில்லை.
ஆனால் பும்ராவின் வருகைக்கு பின் அது நடந்துள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட்டை ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆதிக்கம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் மிரட்டுகிறார். பேட்ஸ்மேன்கள் பும்ராவை டாமினேட் செய்வதை பார்ப்பதே அரிதினும் அரிதான ஒன்று. எதிரணி வீரர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று பும்ரா அறிந்திருக்கிறார். தற்போதைய சூழலில் பும்ரா தான் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.
மாடர்ன் டே கிரிக்கெட்டில் பும்ராவை நிச்சயம் சேர்க்கலாம். நாம் அனைவரும் கிளென் மெக்ராத், லசித் மலிங்கா உள்ளிட்டோரின் ஆதிக்கத்தை சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்துள்ளோம். அவர்களின் தாக்கத்தை பும்ராவின் பவுலிங்கில் பார்க்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார். பும்ரா குறித்து ரவி சாஸ்திரி மற்றும் ஹர்பஜன் சிங் இடையிலான இந்த விவாதம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.