மும்பை: அமெரிக்காவுக்கு எதிரான 2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படுமோசமான நிலையில் இருந்தபோது, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் களத்திற்குள் வந்து கூறிய ஒரு ஆலோசனைதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாகக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அமெரிக்கப் பந்துவீச்சாளர்களிடம் சிக்கித் திணறியது. ரசிகர்கள் 200 ரன்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், இந்திய அணி 13 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது.

அபிஷேக் சர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா என அதிரடி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனி ஆளாகப் போராடிக் கொண்டிருந்தார்.
அந்த இக்கட்டான நேரத்தில் நடுவில் விடப்பட்ட சில நிமிட இடைவேளையின்போது, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்தார். சஞ்சு சாம்சனுடன் வந்த அவர், சூர்யகுமார் யாதவிடம் சிறிது நேரம் தீவிரமாகப் பேசினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் சூர்யகுமாருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்தபோது இது 180 அல்லது 190 ரன்கள் அடிக்கும் மைதானம் இல்லை என்று எனக்குத் தோன்றியது. 140 ரன்கள் எடுத்தாலே பெரிய விஷயம் என்று நினைத்தேன். அந்த இடைவேளையின்போது கௌதி அண்ணா (கம்பீர்) என்னிடம் வந்து, 'நீ கடைசி வரைக்கும் விக்கெட்டை விடாமல் நின்றால் போதும்.. உன்னால் எப்போது வேண்டுமானாலும் ஸ்கோரை ஈடுகட்ட முடியும்' என்று கூறினார். அந்த ஒரு வார்த்தைதான் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "நான் மும்பை மைதானங்களில்தான் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தேன். வான்கடே மைதானம் எனக்கு அத்துப்படி. இங்குள்ள ஆடுகளத்தில் கடைசி நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்குத் தெரியும். கம்பீர் சொன்னது போலக் கடைசி வரை நின்றதால், நேத்ரவல்கர் வீசிய ஓவர்களில் ரன்களைக் குவிக்க முடிந்தது" என்றார்.
கம்பீரின் ஆலோசனையைக் கேட்ட சூர்யகுமார், 49 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 161 ஆக உயர்த்தினார். இதுவே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.
அணியின் மற்ற வீரர்கள் குறித்துத் தகவல் அளித்த சூர்யகுமார், "ஜஸ்பிரித் பும்ராவுக்கு வானிலை மாற்றத்தால் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதனால்தான் அவர் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. அபிஷேக் சர்மாவுக்கும் உடல்நலக்குறைவு இருந்தது. வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவர் டெல்லியில் நடைபெறும் அடுத்த போட்டிக்கானப் பயிற்சியில் அணியுடன் இணைவார்" என்று தெரிவித்தார்.