நியூயார்க் : ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுவதை போல் உணர்ந்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் சிவம் துபே 35 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிவம் துபே மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இதனால் சிவம் துபேவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

ஆனால் நியூயார்க் மைதான பிட்சிலேயே தனது இயல்புக்கு மாறான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிவம் துபே. சரியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன் ஃபார்முக்கு வந்திருப்பதால், சிவம் துபேவின் ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து சிவம் துபே மனம் திறந்துள்ளார்.
அதில், நான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுவதை போல் உணர்ந்தேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விளையாடுகிறோம் என்பதே நினைவில் இல்லை. நியூயார்க் மைதான பிட்சில் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்றால், நமது சிறந்த ஷாட்டில் மட்டுமே அடிக்க முடியும் என்று கருதுகிறேன். அமெரிக்கா அணிக்கு எதிராக சரியாக எனது பலமான திசையில் பந்து வீசப்படுவதற்காக காத்திருந்தேன்.
சாதாரணமாக முதல் பந்தில் இருந்தே எந்த பேட்ஸ்மேனாலும் அடித்து விளையாட முடியாது. ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் கொஞ்சம் நேரம் எடுக்கும் வகையிலான பிட்ச் இது. நிச்சயம் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிக்ஸ் அடிப்பதை மிஸ் செய்கிறேன். சர்வதேச போட்டியில் மட்டுமல்லாமல் வலைப்பயிற்சியில் சிக்ஸ் அடிப்பதே சிரமமாக இருந்தது. அதேபோல் இந்த பிட்சில் கூடுதலாக பவுலிங் விரும்பினேன்.
ஆனால் எனது பந்தில் சிக்ஸ் அடிக்கப்பட்டதால், அதிகமாக பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சிவம் துபேவுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும் என்பதால், மிடில் ஆர்டரில் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் சிவம் துபேவை பிளேயிங் லெவனில் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.