நியூயார்க் : ரோகித் சர்மாவுக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்திருப்பதாகவும், சூர்யகுமார் யாதவுடன் யு15 அணியில் இணைந்து விளையாடியுள்ளதாகவும் அமெரிக்கா வீரர் நெட்ரவால்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நியூயார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்கா அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த அணியின் ஜோன்ஸ், மொனாங்க் படேல், கோரே ஆண்டர்சன் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பாதி பேர் இந்திய வீரர்கள் என்பதால், ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அணிக்காக ஆடி வரும் ஏராளமான வீரர்கள் இந்திய அணிக்காக யு19, ரஞ்சி டிராபி உள்ளிட்ட போட்டிகளில் விளையாடியவர்கள் தான். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரை சிறப்பாக வீசி அமெரிக்கா அணி வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் சவுரப் நெட்ரவால்கர்.
இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து நெட்ரவால்கர் பேசுகையில், நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். யு15 அணிக்காக விளையாடிய போது சூர்யகுமார் யாதவுடன் தான் நானும் வளர்ந்தேன். நாங்கள் இருவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதை நினைத்தால் உற்சாகமாக உள்ளது. யு15 நாட்களின் போதே சூர்யகுமார் யாதவ் ஒரு சுவாரஸ்யமான வீரர் என்பது தெரியும். அனைத்து பவுலர்களையும் வெளுத்துக்கட்டிவிடுவார்.
கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரிய சதங்களை விளாசுவார். அதனால் அப்போதே சூர்யகுமார் யாதவ் ஸ்பெஷலாக நிச்சயம் இருப்பார் என்று கணித்தேன். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் வலைப்பயிற்சியில் விளையாடி இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி செய்யும் போது, ரோகித் சர்மாவுக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ரோகித் சர்மா அனைவருக்கும் ஊக்கமளிக்கக்கூடிய வீரராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.