நியூயார்க் : அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்ததால் நிம்மதியின்றி இருந்ததாக இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார் அர்ஷ்தீப் சிங். அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 17 டாட் பால்கள் உட்பட 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 5வது விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்த போதும், சிராஜ் அந்த கேட்சை தவறவிட்டார்.

இதன் மூலமாக டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரரின் சிறந்த பவுலிங்கான அஸ்வினின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளார். இதன் காரணமாக அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்பின் அர்ஷ்தீப் சிங் பேசுகையில், இந்த போட்டியில் எனது பவுலிங்கை நினைத்து மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் கடந்த 2 போட்டிகளில், நான் கூடுதலாக சில ரன்களை விட்டுக் கொடுத்தேன்.
அதனால் கொஞ்சம் கூட நிம்மதியில்லை. ஆனாலும் அணி நிர்வாகமும், கேப்டனும் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தனர். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தேன். நியூயார்க் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருந்தது. எங்களின் திட்டம் சாதாரணமாக வைத்திருந்தோம்.
சரியான லெந்தில் பந்தை வீசினாலே போதும், மற்ற அனைத்தையும் பிட்ச் செய்துவிடும் என்று திட்டமிட்டிருந்தோம். அதேபோல் ரன்களை குவிப்பதற்கான லெந்தில் பந்துவீசக் கூடாது என்று நினைத்தேன். இந்திய அணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க திணறினார்கள். அதனால் ஹார்ட் லெந்தில் வீச வேண்டும் என்பதே திட்டம். இதுபோன்ற பிட்ச்களில் தான், சூழலையும் பயன்படுத்தி விளையாட வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் விளையாடும் போது, ஒவ்வொரு வீரருக்கும் சில பணிகள் தவறாமல் செய்ய வேண்டிய நிலை இருக்கும். குறிப்பாக உடற்பயிற்சிகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அது எனக்கு பயனளிக்கிறது. இந்த போட்டியில் பவுலிங் செய்த அனைத்து வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள். சூப்பர் 8 சுற்றிலும் சிறந்த பவுலிங்கை தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.