நியூயார்க் : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

அமெரிக்கா தரப்பில் நெட்ரவால்கர் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேற, அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. தொடர்ந்து ரிஷப் பண்ட் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் தேவையான நேரத்தில் சிக்சரை அடிக்க, இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 33 ரன்கள் சேர்த்திருந்தது.
சிறப்பாக ஆடிய கொண்டிருந்த ரிஷப் பண்ட், அமெரிக்கா அணியின் அலி கான் வீசிய இன்-ஸ்விங்கரை கணிக்காமல் மிடில் ஸ்டம்ப் தெறிக்க 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆச்சரியமளிக்கும் வகையில் சிவம் துபே களமிறக்கப்பட்டார். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிபப்டுத்த இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்திருந்தது. அமெரிக்கா அணியின் கைகள் ஓங்கியிருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் கொடுத்த கேட்சை நெட்ரவால்கர் தவறவிட்டார்.
இதனைப் பயன்படுத்தி சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட, சிவம் துபேவும் அதிரடியில் இறங்கினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அமெரிக்கா அணிக்கு திடீரென 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்பட்டது. ஏனென்றால் ஒவ்வொரு ஓவருக்கும் இடையில் 60 வினாடிகள் மட்டுமே அளிக்கப்படும். 60 வினாடிகளுக்கு மேல் அமெரிக்கா அணி 3 முறை எடுத்துக் கொண்டதால், 5 ரன்கள் பெனால்டியாக வழங்க, இந்திய அணி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.
இதன்பின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார். இதன் மூலம் 49 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிக்க, இறுதியாக இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. சிறப்பாக ஆடிய சிவம் துபே 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.