நியூயார்க்: அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா பந்து வீச்சில் தடுமாறினார். அதே சமயம் ஹர்திக் பாண்டியா அதை ஈடு கட்டி சிறப்பாக பந்து வீசி விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை காப்பாற்றினார்.
உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ராவை காட்டிலும் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருக்கும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் பும்ரா விக்கெட்கள் வீழ்த்தா விட்டாலும் முதல் சில ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி வந்தனர்.
மறுபுறம் ஹர்திக் பாண்டியா மிகக் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால், பும்ரா 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த போதும், ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். பும்ரா நான்கு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
ஆனால், ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவர் வீசியதோடு 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது அமெரிக்க அணி.
கடந்த இரண்டு போட்டிகளில் பும்ரா ஒட்டுமொத்தமாக ஏழு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த இரண்டு போட்டிகளிலும் அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்று இருந்தார். ஆனால், இந்த முறை அவரைக் காட்டிலும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். ஹர்திக் பாண்டியா ஒரு பகுதி நேர பந்து வீச்சாளர் தான். அப்படி இருந்தும் அவர் பந்து வீச்சில் பும்ராவைக் காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்தி அசத்தினார்.