நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஜடேஜா என்ன செய்துள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்த போது, சூர்யகுமார் யாதவ் - சிவம் துபே இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தனர்.

இதன் மூலமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 3வது அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நியூயார்க் மைதானத்தில் திட்டமிடப்பட்ட 8 நாட்களில் 10 போட்டிகளும் முடிவடைந்தன.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். இருந்தாலும் இந்திய அணி ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இரு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இந்த 3 போட்டிகளிலும் அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் 20 ரன்களை விளாசியுள்ளார். ஆனால் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜாவின் ஆட்டம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் 3 போட்டிகளிலும் விளையாடிய ஜடேஜா ஒரு போட்டியில் கூட விக்கெட் வீழ்த்தவில்லை. அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்யவே அழைக்கப்படவில்லை. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பினாலும் எப்போது ஜடேஜாவின் ஃபீல்டிங் அசத்தலாக இருக்கும்.
ஆனால் இந்த 3 போட்டிகளில் ஜடேஜா ஒரு கேட்ச் கூட பிடிக்கவில்லை. 3 போட்டிகளில் விளையாடிய போதும் ஜடேஜா எந்த விதத்திலும் பங்களிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ள சூப்பர் 8 போட்டிகளில் ஜடேஜா வெளியேற்றப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.