நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடிய அமெரிக்க அணி ஒரே ஒரு தவறால் கலங்கிப் போய் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அது அமெரிக்க அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த போட்டி நடைபெற்ற நியூயார்க் நகர மைதானத்தில் சேஸிங் செய்வது மிக கடினமாக இருந்த நிலையில் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இதுவரை 100 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸிங் செய்ததே இல்லை என்பதால் அமெரிக்க அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. மறுபுறம் இந்திய அணி பேட்டிங்கில் மிக மோசமாக சொதப்பியது.

உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ரோஹித் சர்மா மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார். ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இணைந்து நிதானமாக ஆடி வந்தனர்.
அதிலும் சிவம் துபேவுக்கு ஒரு பந்து கூட பேட்டில் சரியாக படவில்லை. அவர் டெஸ்ட் போட்டி போல ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார். மறுபுறம் சூர்யகுமார் யாதவும் அழுத்தம் காரணமாக பவுண்டரி அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். ஒரு ஓவருக்கு 7 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் ஆடிக் கொண்டிருந்தது இந்திய அணி.
இந்த பிட்ச்சில் ஒரு ஓவருக்கு ஏழு ரன்கள் எடுப்பது என்பதே சவாலான விஷயமாக இருந்தது. இந்த நிலையில் 15 வது ஓவரின் முடிவில் அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென அம்பயர் அமெரிக்க அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி அளித்தார்.
டி20 உலகக்கோப்பை விதிகளின்படி பந்து வீசும் அணி ஒவ்வொரு ஓவருக்கும் இடையில் 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் அடுத்த ஓவரை வீச தயாராகிவிட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் மூன்று முறைக்கு மேல் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீச தயாராகவில்லை என்றால் அந்த அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி வழங்கப்படும். அதாவது எதிரணிக்கு அதன் ஸ்கோரில் ஐந்து ரன்கள் சேர்க்கப்படும்.
அந்த வகையில் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அந்த ஐந்து ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்ததால் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் போதும் என சூழ்நிலை மாறியது. அதனால், இந்திய அணியின் ரன் ரேட் அழுத்தம் வெகுவாக குறைந்தது. மேலும், அமெரிக்க வீரர்கள் தாங்கள் தவறு செய்து விட்டதை உணர்ந்து கதிகலங்கிப் போனார்கள். அவர்களின் உடல்மொழி சரிந்தது.
அதை பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் யாதவ் 17வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அதுவரை அழுத்தம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே பவுண்டரி அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில், அந்த பெனால்டி ரன்கள் போட்டியில் மாற்றத்தை கொண்டு வந்தது. அந்த ஒரு தவறால் அமெரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்கும் அதுவே முக்கிய காரணமாக அமைந்தது. 18.2 ஓவரில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.