நியூயார்க் : அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த சில போட்டிகளாக முதல் பேட்டிங் செய்த அணியே வென்றுள்ள நிலையில், ரோகித் சர்மா முடிவு ஆச்சரியம் கொடுத்தது.

இதன்பின் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே அமெரிக்கா அணியின் ஷயான் ஜஹான்கிர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை சேர்த்தது. சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
அமெரிக்கா அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான மும்பையை சேர்ந்த நெட்ரவால்கர் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்துவிட்டு மறுபக்கம் சென்றார். இதன்பின் 2வது பந்தை நெட்ரவால்கர் 5வது ஸ்டம்ப் லைனில் வீச, அதனை அடிக்க முயன்று விராட் கோலி விக்கெட் கீப்பரிடம் கேட்சானார். இதனால் விராட் கோலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
இந்திய அணி முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா அணி 2வது பந்தில் விக்கெட் வீழ்த்தியுள்ளது. விராட் கோலி சென்றதால், மொத்த நம்பிக்கையும் ரோகித் சர்மா பக்கம் சென்றது. ஆனால் நெட்ரவால்கர் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில் ஸ்கராம்பில்ட் சீம் வீசி ரோகித் சர்மாவை 3 ரன்களில் வீழ்த்தினார்.
இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் இரு ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் புலம்பெயர் இந்தியரான நெட்ரவால்கர் டி20 உலகக்கோப்பையில் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்திய யு19 அணிக்காக 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.