நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசிய அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ், தாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாகவும், அந்த கூடுதல் ரன்களை தாங்கள் எடுத்து இருந்தால் போட்டி மாறி இருக்கும் எனவும் புலம்பினார்.

இந்த போட்டி நியூயார்க் நகர மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதுவரை இந்த பிட்ச்சில் எந்த அணியும் 100 ரன்களுக்கு மேற்பட்ட ஸ்கோரை சேஸிங் செய்தது இல்லை என்ற நிலையில் இந்திய அணி 111 ரன்கள் என்ற இலக்கை 18.2 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி 49 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த தோல்விக்கு பின் அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பேசுகையில், "நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் 125 முதல் 130 ரன்கள் எடுத்து இருந்தால், அது நிச்சயம் கடினமான ஸ்கோர் ஆக இருந்திருக்கும். எங்கள் அணியின் வீரர்கள் மிக கட்டுக்கோப்பாக செயல்பட்டார்கள். எங்கள் பந்துவீச்சை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்தப் போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. ரசிகர்கள் எங்களுக்கு நன்றாக ஆதரவு அளித்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க ரசிகர்கள் அதிக அளவில் வந்து எங்கள் போட்டிகளை பார்க்க வேண்டும் என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அது இப்போது நடந்துள்ளது. அடுத்த போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக விளையாடுவோம்." என்றார்.