நியூயார்க்: இந்திய டி20 அணியில் ரவீந்திர ஜடேஜாவை அணியை விட்டு நீக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா.
ஆனால், அவருக்கு அணியில் இதுவரை போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சுழற் பந்துவீச்சாளராகவும் அவருக்கு அதிக ஓவர்கள் அளிக்கப்படவில்லை. அதேபோல பேட்டிங்கிலும் அவர் ஏழாம் வரிசையில் தான் இறங்கி வருகிறார். மேலும், தனக்கு கிடைத்த வாய்ப்பிலும் ரவீந்திர ஜடேஜா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், குரூப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டியே மீதமுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் மட்டுமே அமெரிக்காவில் விளையாட உள்ளது. அதன் பின் சூப்பர் 8 சுற்று மற்றும் அதற்கு பின் நடக்க உள்ள அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளதால் அந்த பிட்ச்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி தன்னை தயார் செய்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
தற்போது குரூப் சுற்றில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. அடுத்து அமெரிக்கா மற்றும் கனடா அணிகளை இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரண்டு போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை பயன்படுத்தி பார்க்கலாம் என இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பந்து வீச்சிலும் விக்கெட் வீழ்த்தவில்லை. அதே சமயம் குல்தீப் யாதவை அணியில் சேர்த்தால் அவர் பந்து வீச்சில் விக்கெட் வேட்டை நடத்துவார் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் ரவீந்திர ஜடேஜாவை விட குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.
ரவீந்திர ஜடேஜா சுழற் பந்துவீச்சாளர் என்றாலும் அவர் பந்தை திருப்பும் ஆற்றல் கொண்டவர் அல்ல. மாறாக பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப பந்தை சறுக்கிச் செல்லும் வகையில் தான் வீசுவார். ஆனால், குல்தீப் யாதவ் பந்தை பிட்ச் செய்து திருப்பும் ஆற்றல் கொண்டவர். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் இதுபோல பந்தை திருப்பும் ஆற்றல் கொண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைக்கும்.
அதற்கு ஒரு உதாரணம் தான் இன்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டி. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா நான்கு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். எனவே, இந்திய அணியும் இதே போல ரவீந்திர ஜடேஜாவை நீக்கிவிட்டு முழுநேர ஸ்பின்னரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது சுழற் பந்துவீச்சாளராக அக்சர் பட்டேல் செயல்படுவார். அவர் ஏற்கனவே விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். மேலும், பேட்டிங்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கி 20 ரன்கள் சேர்த்து கை கொடுத்தார். எனவே, அவர் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக செயல்படுவார்.