மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் செயல்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணி அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டதே பேட்டிங் சறுக்கலுக்குக் காரணம் என்று முன்னாள் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் சாடியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அமெரிக்கப் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவின் போராட்டத்தால் 161 ரன்களை எட்டி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ஆட்டம் குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், "இந்திய அணி தனது முழுத் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளைப் பந்துவீச்சாளர்கள் சரிசெய்துவிட்டனர். இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த மோசமான ஆட்டத்திற்கு முழுமுதற் காரணம் 'அதீத நம்பிக்கை' மட்டுமே" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேட்டிங்கில் நீங்கள் வேண்டுமானால் சிங்கமாக இருக்கலாம். அதற்காக எதிரணி வீரர்கள் தாங்களாகவே வந்து உங்களிடம் சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான முயற்சியைக் களத்தில் போட வேண்டும். அமெரிக்க அணியை இந்திய வீரர்கள் மிகவும் சாதாரணமாக எடைபோட்டுவிட்டார்கள். எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது" என்று விமர்சித்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்துப் பேசிய அவர், "சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் கதை முடிந்திருக்கும். அவர் தொடக்கத்தில் நிதானமாகவும், கடைசியில் அதிரடியாகவும் ஆடியதால்தான் 160 ரன்களை எட்ட முடிந்தது. ஒருவேளை சூர்யகுமார் கொடுத்த கேட்சை அமெரிக்கா பிடித்திருந்தால், 160 ரன்கள் என்பது வெறும் கனவாகவே போயிருக்கும்" என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்தத் தடுமாற்றம் தொடக்கத்திலேயே நிகழ்ந்தது நல்லதுதான் என்று ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். "முதல் போட்டியிலேயே இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தது இந்திய அணிக்கு நல்லதுதான். இனி வரும் போட்டிகளில் அவர்கள் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். மிகவும் கவனமாக விளையாடுவார்கள்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது.