மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்திய அணி, அமெரிக்காவுக்கு எதிராகச் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பேட்டிங் சரிவைச் சந்தித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தனி ஆளாகப் போராடவில்லை என்றால், இந்திய அணியின் கதை பாதி போட்டியிலேயே முடிந்திருக்கும்.
சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே, அமெரிக்கா போன்ற ஒரு சிறிய அணியிடம் இந்திய பேட்டிங் வரிசை சரிவை சந்தித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் (20) மற்றும் திலக் வர்மா (25) ஆகியோர் சற்று அதிரடி காட்டி அணியை மீட்டெடுக்க முயன்றனர். ஆனால், 5.2வது ஓவரில் இஷான் கிஷன் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணியின் சரிவு தொடங்கியது.
45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த ஒரு ரன் எடுப்பதற்குள் மேலும் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, இந்திய அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் போனது.
ரிங்கு சிங் (6) மற்றும் ஹர்திக் பாண்டியா (5) ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, இந்திய அணி 12.4 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரு அசோசியேட் அணிக்கு எதிராக 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது இதுவே முதல் முறையாகும். இது இந்திய அணிக்கு ஒரு மோசமான சாதனையாகப் பதிவானது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போலச் சரிந்து கொண்டிருந்தாலும், மறுமுனையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் நங்கூரம் பாய்ச்சி நின்றார். நிதானமாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தனது வழக்கமான 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி அமெரிக்கப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
தனி ஒருவனாகப் போராடிய அவர், 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 இமாலய சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்து அவருக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சூர்யகுமார் யாதவின் இந்த அபாரமான ஆட்டத்தால் மட்டுமே, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
அமெரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ஷாட்லி வான் ஷால்க்விக் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முகமது மோஷின் 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஹர்மீத் சிங்கும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.