மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 9வது வெற்றியைப் பதிவு செய்து தென்னாப்பிரிக்காவின் சாதனையை முறியடித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, அமெரிக்கப் பந்துவீச்சில் சிக்கி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனி ஒருவராகப் போராடி 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியை மீட்டெடுத்தார். இதனால் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணி, இந்தியப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பைத் தொடர்களில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்பு, தென்னாப்பிரிக்கா அணி 2024ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
இந்தியா (2024-2026) - 9 வெற்றிகள்*
தென்னாப்பிரிக்கா (2024) - 8 வெற்றிகள்
ஆஸ்திரேலியா (2022-2024) - 8 வெற்றிகள்
இந்தியா (2012-2014) - 7 வெற்றிகள்
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணி ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிப் பயணம், இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியிலும் தொடர்கிறது.
ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய பேட்டிங் வரிசை முதல் போட்டியில் சொதப்பினாலும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.