மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, கத்துக்குட்டி அணியான அமெரிக்காவுக்கு எதிராக தடுமாறியது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையை முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கடுமையாக விமர்சித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்தியா, 13 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இரண்டாம் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். திலக் வர்மா, இஷான் கிஷன் ஜோடி ஆரம்ப அழுத்தத்தைச் சமாளிக்க முற்பட்டது. இருப்பினும், மோனங் படேல் தலைமையிலான அமெரிக்க அணி பவர் பிளேயின் இறுதியில் மேலும் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவைச் சரிவில் தள்ளியது.

45-1 என்ற வலுவான நிலையில் இருந்து, இந்திய அணி ஒரே ஓவரில் 46-4 ஆக சரிந்தது. மிடில் ஓவர்களில் ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் பெரிய ஷாட்களுக்கு முயற்சித்து அவுட்டாகினர். "இதை அறிவில்லாத பேட்டிங் என்றே சொல்ல வேண்டும்," என இர்பான் பதான் விமர்சித்தார்.
அமெரிக்க அணியின் திட்டமிடலைப் பாராட்டிய இர்பான் பதான், "அவர்களுக்கு வாழ்த்துக்கள்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதற்கிடையில், வைரஸ் காய்ச்சலால் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகிய நிலையில், இந்திய அணி விளையாடியது. ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இந்தியா கதை அவ்வளவு தான் என்று எதிர்பார்த்த நிலையில், சூப்பர் மேன் போல் வந்து இந்திய அணியை சூர்யகுமார் பேட்டிங்கில் காப்பாற்றினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 49 பந்துகளில் 84 ரன்கள் குவிக்க, இந்திய அணி 161 ரன்கள் சேர்த்தது. ஒரு வேலை இந்திய அணி 130 ரன்களுக்குள் சுருண்டு இருந்தால், அமெரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும்.