மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா, அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு முகமது சிராஜின் அபார பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. காயமடைந்த ஹர்ஷித் ரானாவுக்குப் பதிலாக கடைசி நேரத்தில் அணியில் இணைந்த சிராஜ், மும்பைக்குப் வந்து வான்கடே மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 24 மணி நேரம் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்தது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ், பிளேயிங் லெவன் அணியில் இணைந்தார். முதல் இரண்டு ஓவர்களிலேயே அமெரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆண்ட்ரீஸ் கோஸ், சாய்தேஜா முக்கமல்லா ஆகியோரை வீழ்த்தினார். நான்கு ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த சிராஜ், இந்திய அணியின் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளரானார். 31 வயதான இவர், ஜூலை 2024-க்குப் பிறகு ஆடிய முதல் டி20ஐ போட்டி இது.

போட்டிக்குப் பிந்தைய நிகழ்ச்சியில் பார்த்திவ் படேலுடன் பேசிய சிராஜ், இந்த வாய்ப்பு தன் கனவு நனவான தருணம் என்றார். "நேற்று சூர்யா பாய் தொலைபேசியில் அழைத்து, 'மியா, உன் மூட்டைகளை தூக்கி கொண்டு, அணியில் சேர்' என்று கூறினார். நான் சூர்யா பாயிடம், 'என்னை கேலி செய்யாதீர்கள்' என்று சொன்னேன். ஏனெனில் அவர் கேலி செய்வதாகவே நான் நினைத்தேன். சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது என் கனவாக இருந்தது; அது விதியால் எழுதப்பட்டது, அதனால்தான் நான் இங்கு இருக்கிறேன்."
ஆட்டத்தில், முதல் இரண்டு பந்துகளில் சீம் எதிர்பார்த்த அளவு ஒத்துழைக்காததால், தொடக்க ஆட்டக்காரர்களை அவுட்டாக்க, 'டெஸ்ட்' போட்டிக்குரிய லெங்த் பந்துவீச்சை மாற்றியதாக சிராஜ் விளக்கினார். wobble length பந்துகளை வீசி அவர்களை வெளியேற்றினார்.முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் விளாசினார்.
திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும், இஷான் கிஷன் 16 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அமெரிக்க பந்துவீச்சில் ஷேட்லி வான் ஷால்க்விக் 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதற்கு பதிலளித்த அமெரிக்க அணி, 132 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் தடுமாறியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, அமெரிக்காவை கட்டுக்குள் வைத்தனர்.