நியூயார்க் : பாகிஸ்தான், கனடா அணிகளை வீழ்த்தியதை போல் இந்திய அணியையும் வீழ்த்த முயற்சிப்போம் என்று அமெரிக்கா வீரர் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளை வீழ்த்தி இருப்பதால், அமெரிக்கா அணியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து அமெரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ் பேசுகையில், இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற எந்த பரபரப்பும் இல்லை. நாங்கள் இந்த போட்டியை மற்றுமொரு போட்டியாகவே கருதுகிறோம்.
இந்திய அணி சிறந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடந்த இரு போட்டிகளில் பாகிஸ்தான், கனடா என்று 2 சிறந்த அணிகளை நாங்களும் வீழ்த்தி இருக்கிறோம். நாங்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு எதிராக விளையாடுகிறோம், இந்திய அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்று பெயரை நினைத்து அச்சம் கொள்ளப் போவதில்லை. அந்த பெயர்களுக்கு எதிராக விளையாடப் போவதில்லை.
நாங்கள் எங்களின் ஆட்டத்தை விளையாடப் போகிறோம். நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த கடுமையாக முயற்சிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நியூயார்க் மைதானத்தில் நிச்சயம் இரு அணிகளுக்கும் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அமெரிக்கா அணியிலும் பாதி பேர் இந்தியர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.
அரையிறுதிக்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியை மற்றொரு போட்டியாக பார்க்கிறோம் என்று அமெரிக்கா வீரர் ஜோன்ஸ் கூறியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவிலும் கிரிக்கெட் போட்டிகள் வேகமாக வளர்ந்து வருவதாக கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர்.