அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் துல்லியமான பந்துவீச்சில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சிவ்நரைன் சந்தர்பாலின் மகனான டேகனரைன் சந்தர்பால் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்திய மண்ணில் இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி, இந்திய அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜான் கேம்ப்பெல் மற்றும் டேகனரைன் சந்தர்பால் களமிறங்கினர். ஜஸ்பிரித் பும்ராவும், முகமது சிராஜும் பந்துவீச்சைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய நான்காவது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்டார் சந்தர்பால். லெக் ஸ்டம்ப் திசையில் வந்த அந்தப் பந்தை, சந்தர்பால் லேசாகத் திரும்பி தட்டிவிட முயன்றார். ஆனால், பந்து எதிர்பாராத விதமாக எகிறி அவரது பேட்டிங் க்ளவுஸில் பட்டு விக்கெட் கீப்பரை நோக்கிச் சென்றது.

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பராகக் களமிறங்கிய துருவ் ஜுரல், ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் தனது வலதுபுறம் பாய்ந்து, மிகச் சிறப்பாக அந்தக் கேட்சைப் பிடித்தார். இதன்மூலம், 11 பந்துகளைச் சந்தித்து ரன் கணக்கைத் தொடங்காமலேயே டேகனரைன் சந்தர்பால் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். தந்தையைப் போலவே பேட்டிங் ஸ்டைலைக் கொண்டிருக்கும் டேகனரைன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் டக் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவாக அமைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே இரட்டை சதம் (207*) அடித்துத் தனது திறமையை நிரூபித்திருந்தாலும், இன்றைய போட்டியில் சிராஜின் பந்துவீச்சுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சிராஜின் இந்த விக்கெட், இந்திய மண்ணில் இந்த கிரிக்கெட் சீசனின் முதல் விக்கெட்டாகப் பதிவானது. இந்த விக்கெட்டின் மூலம், இந்திய அணி ஆட்டத்தில் தனது பிடியை ஆரம்பத்திலேயே இறுக்கியுள்ளது.
தந்தையின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் டேகனரைன் சந்தர்பாலுக்கு இந்த ஆட்டம் ஒரு கசப்பான அனுபவமாகவே அமைந்துள்ளது. அவரது விக்கெட்டை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்தது. முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.