கயானா : டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை காப்பாற்ற வந்த தேவ தூதர் போல் சர்வதேச அரங்கில் கால் பதித்தவர் தான் சூரியகுமார் யாதவ். 2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அலறவிட்டவர்.
ஆனால் அதன் பிறகு சூரியகுமார் தன்னுடைய இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தவில்லை. 2023 ஆம் ஆண்டு சதத்துடன் சூரியகுமார் யாதவ் தொடங்கினாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன் பிறகு ஐபிஎல் தொடரில் தன்னுடைய பழைய பார்மை மீண்டும் வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் அதன்பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட பெயர் சொல்லும் அளவுக்கு எந்த சாதனையும் செய்யவில்லை. சரி முதல் டி20 போட்டியிலாவது சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டால் வெறும் 21 ரன்கள் தான் எடுத்தார்.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய இந்திய அணியில் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சூரியகுமார் யாதவ் தற்போது மூன்றாவது பேட்டிங் வரிசையில் விளையாடுகிறார். அவர் முதல் டி20 போட்டியில் சரியாக விளையாடவில்லை. ஒரு போட்டியை வைத்து எப்போதுமே வீரர்களை நோண்டக்கூடாது .
ஏனென்றால் டி20 கிரிக்கெட் தான் சூரிய குமார் யாதவ்க்கு மிகவும் பிடிக்கும். பந்து பேட்டுக்கு நன்றாக வந்தால் நிச்சயம் சூரியகுமார் ரன் சேர்ப்பார். முதல் டி20 போட்டியில் பழைய ஆடுகளமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கயானாவில் புதிய ஆடுகளம் பயன்படுத்தப்படும். இதன் காரணமாக சூரிய குமார் யாதவும் ரன் சேர்ப்பார் என நம்பிக்கை கொள்கிறேன்.
ஆனால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சூரியகுமார் யாதவ் கையில்தான் அது இருக்கிறது. திலக் வர்மாவின் ஆட்டமும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.எனினும் சூரியகுமாரை சுற்றி தான் டி20 கிரிக்கெட்டில் மற்ற வீரர்கள் ரன் சேர்க்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டு அவர் விளையாட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.