இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி ஆடுகளம் எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இதே மைதானத்தில் தான் இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவடைந்தது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 44.1ஓவரிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 45 புள்ளி ஒரு ஓவரிலும் மட்டுமே பேட்டிங் செய்தார்கள். இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முற்றிலும் இந்தியாவுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக முடிவடைந்தது.
இந்த நிலையில் குறைந்தபட்சம் 4 நாட்கள் ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டும் என முடிவெடுத்துள்ள பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக ஒரு முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவு அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சாதகமாக பேட்டிங் ஆடுகளத்தை அமைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் குவிக்க முடியும். அது மட்டுமில்லாமல் அது இந்திய வீரர்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும். இதுபோன்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பவுலர்கள் எவ்வாறு விக்கெட் எடுக்கிறார்கள் என்பதும் தெரியவரும். எனினும் ஆட்டத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் வழக்கம் போல் டெல்லி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும் என தெரிகிறது.
இந்த ஆடுகளத்தில் களிமண் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆடுகளம் மிக விரைவாக காய்ந்து விடும். இதன் மூலம் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு கடைசி இரண்டு நாட்கள் விருந்தாக அமையலாம். கடைசியாக டெல்லி பிரோரசா கோட்லா மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆடுகளத்திலும் சுழற் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.