டெல்லி: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேற முயற்சி செய்யும். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி நினைத்ததை விட பலம் குன்றிய அணியாக இருப்பதால், பும்ராவை தேவையில்லாமல் அணியில் கொண்டு வந்து சேர்த்து விட்டோமோ என்ற குழப்பத்தில் தேர்வுக் குழு இருக்கின்றது.

இதனால் பும்ராவுக்கு ஓய்வு அளித்துவிட்டு வேறு ஏதேனும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி இந்திய அணியில் முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக உள்ளனர். மூன்றாவது பவுலர் ஆகவும் ஆல்ரவுண்டருமாக நிதீஷ்குமார் இருக்கின்றார். ஆனால் நிதிஷ்குமார் முதல் டெஸ்டில் வெறும் நான்கு ஓவர்கள்தான் வீசியிருந்தார்.
இதன் காரணமாக பும்ராவுக்கு ஓய்வு அளித்துவிட்டு நிதீஷ் குமாரை முழுநேர வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தலாமா என்ற யோசனையில் இந்திய அணி நிர்வாகம் இருக்கின்றது. இதேபோன்று சாய் சுதர்சன் பேட்டிங்கில் தடுமாறி வருவதால் அவருக்கு பதில் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சாய் சுதர்சன் தான் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
வேண்டுமென்றால் பும்ராவுக்கு பதில் தேவுதட் படிக்கல் அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் பும்ராவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்கலாம் என்றும் அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. மற்றபடி இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ஜெய்ஸ்வால் முதல் டெஸ்டில் பெரிய அளவு சாதிக்காத நிலையில் இரண்டாவது டெஸ்டில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கின்றார்.இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடதுகை வேகப்பந்து பேச்சாளரான ஜடியா பிளேட்சை அணிக்குள் கொண்டு வர முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.