வெஸ்ட் இண்டீஸ் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன உலகக்கோப்பை போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார் விஜய் ஷங்கர். ரிஷப் பண்ட் ரசிகர்கள் விஜய் ஷங்கருக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து இருக்க வேண்டும் என கூறினர்.
விஜய் பேட்டிங்
எனினும், விஜய் ஷங்கர் இந்தப் போட்டியில் தன்னை நிரூபிப்பார் என பொதுவான ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். அதற்கேற்ப, ரோஹித் சர்மா, ராகுல் ஆட்டமிழந்த பின் 21வது ஓவரில் களமிறங்கினார் விஜய் ஷங்கர்.
ஆட்டமிழந்தார்
நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், 14 ரன்கள் மட்டுமே எடுத்து கீமர் ரோச் பந்தில், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் விஜய்.
கோலி கோபம்
அப்போது ஆடுகளத்தில் எதிரில் நின்று இருந்த விராட் கோலி முகம் மாறியது. இறுக்கமாக காட்சி அளித்தார் கோலி. கையில் இருந்த கிளவுஸை கீழே போட்டார். அவர் கடும் கோபத்தில் இருப்பது அவரது செயல்களிலேயே தெரிந்தது.
காரணம் என்ன?
விஜய் ஷங்கர் மூன்று போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்தப் போட்டியில், விராட் கோலிக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல், பவுண்டரி அடித்து ரன் சேர்ப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தார். இதெல்லாம் சேர்த்து, விராட் கோலியின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பா?
இதனால், விஜய் ஷங்கருக்கு அடுத்த போட்டியில் அணியில் வாய்ப்பு கிடைக்காது என இப்போதே கூற ஆரம்பித்துள்ளனர். ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோஷமும் அதிகமாக காணப்படுகிறது.