கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி இந்திய அணிக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த டேரன் சமி, 2016 டி20 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "2016ஆம் ஆண்டு இதே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்தான் நான் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்றேன். தற்போது பயிற்சியாளராக இங்கு வந்துள்ளேன். வரலாறு மீண்டும் திரும்புமா என்று எனக்குத் தெரியாது.

இந்தத் தொடரை வெல்ல வேண்டும் என்றால், இந்திய அணியை நாங்கள் வீழ்த்தியே ஆக வேண்டும். இது தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையிலான போர் போன்றது. 2016ஆம் ஆண்டில் தாவீது தான் கோலியாத்தை வீழ்த்தினான். அதைத்தான் நான் எனது வீரர்களிடம் கூறப்போகிறேன். எனது படைவீரர்கள் போருக்குத் தயாராக உள்ளனர்" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது. இது குறித்துப் பேசிய டேரன் சமி, வருண் சக்கரவர்த்தியைச் சமாளிக்கத் தங்களிடம் தெளிவான திட்டம் இருப்பதாகக் கூறினார்.
"வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கலாம். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் எதிராக எப்படி விளையாட வேண்டும் என்று எங்களிடம் தனித்தனியான திட்டங்கள் உள்ளன. அதை எங்கள் வீரர்கள் களத்தில் சரியாகச் செயல்படுத்துவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் சிம்ரான் ஹெட்மையர் தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்தத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 182 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 221 ரன்களைக் குவித்துள்ளார். இது குறித்துப் பேசிய பயிற்சியாளர், "ஹெட்மையர் மிகத் தெளிவான மனநிலையுடன் உள்ளார். அவர் தனது ஆட்டத்தை முழுமையாக ரசித்து விளையாடுகிறார். அவரது பேட்டிங் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது" என்று புகழ்ந்துள்ளார்.

கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி குறித்துப் பேசிய அவர், "அகமதாபாத்தில் நடந்ததை மறந்துவிட்டு, கொல்கத்தாவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். தென்னாப்பிரிக்கா அணி எங்களை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. முதல் சில ஓவர்கள் மிகவும் முக்கியம். ஆடுகளத்தின் தன்மையை விரைவாகக் கணித்து அதற்கேற்ப விளையாடுவோம்" என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால், ஈடன் கார்டன் மைதானத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.