அகமதாபாத்: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், இளம் வீரர் துருவ் ஜுரெல் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் துருவ் ஜுரெல் கிட்டத்தட்ட 6 இன்னிங்ஸில் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் 2 இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ரிஷப் பண்டின் அபார ஆட்டம் காரணமாக திறமையான வீரரான துருவ் ஜுரெல் வேறு வழியின்றி பெஞ்ச் செய்யப்பட்டார்.

ஆனால் 4வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயத்தின் போது, ஒரு போட்டி முழுக்க துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பணிகளை மேற்கொண்டார். இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக விக்கெட் கீப்பராக செயல்பட்டதால், சில தவறுகள் நடந்தன. ஆனாலும் துருவ் ஜுரெலின் செயல்பாடுகள் பாராட்டுக்களை பெற்றது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெல் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பேட்டிங்கில் துருவ் ஜுரெல் ஃபார்மில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் உடனடியாக துருவ் ஜுரெல் களம் புகுந்தார். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய துருவ் ஜுரெல், சில சிக்சர்களை விளாசினார். பின்னர் உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது கேஎல் ராகுல் சதம் அடித்து ஆட்டமிழந்தார். இதனால் துருவ் ஜுரெல் - ஜடேஜா கூட்டணி விக்கெட்டை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் துருவ் ஜுரெல் கொஞ்சம் கூட கவலையின்றி சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய துருவ் ஜுரெல் 91 பந்துகளில் அரைசதம் அடித்ததோடு, சல்யூட் அடித்தும் கொண்டாடி அசத்தினார். தேநீர் இடைவேளை வரை கொஞ்சம் கூட அசராமல் ஆடிய துருவ் ஜுரெல், 68 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்த இன்னிங்ஸில் துருவ் ஜுரெல் மட்டும் சதம் விளாசினால், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்று பார்க்கப்படுகிறது.