அகமதாபாத்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தது, ரசிகர்கள் மத்தியில் தீவிரக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் டிராவிட், சத்தேஸ்வர் புஜாரா போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய நம்பர் 3 இடத்திற்கு இது நல்ல அடையாளம் அல்ல என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. குறிப்பாக, "இந்த பந்துவீச்சுக்கு, இந்த மைதானத்தில் கருண் நாயர் களமிறங்கியிருந்தால் ஒரு முச்சதம் அடித்திருப்பார்" என்று ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருவது, சாய் சுதர்சன் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அகமதாபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் சாய் சுதர்சன் களமிறங்கியபோது, அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல் தொடரில் இதே மைதானத்தில் ரன் மழை பொழிந்தவர், பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எளிதாகச் சமாளிப்பார் என்றே அனைவரும் நம்பினர். ஆனால், களத்தில் நடந்தது வேறு. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் காணப்பட்ட அவர், 19 பந்துகளைச் சந்தித்து வெறும் 7 ரன்கள் எடுத்த நிலையில், ரோஸ்டன் சேஸின் சுழலில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்தச் சொற்ப ரன்களை தாண்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. இதுவரை 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், வெறும் 21 என்ற சராசரியில் 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும். இது, ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் 40-க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரு வீரர் சர்வதேச அரங்கில் ஏமாற்றம் அளிக்கிறார் என்பதாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது..
சாய் சுதர்சனின் இந்தத் தடுமாற்றம் குறித்துப் பேசியுள்ள முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், "சாய் சுதர்சன் சற்று பதற்றத்துடன் காணப்பட்டார். நம்பர் 3 இடத்தை நிரந்தரமாகப் பிடித்துவிட வேண்டும் என்ற அழுத்தம் அவர் மீது இருப்பதாகத் தெரிகிறது. அவர் அமைதியாகத் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரசிகர்கள் சாய் சுதர்சன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு ரசிகர் தனது பதிவில், "சாய் சுதர்சன் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், நம்பர் 3 இடத்தில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. 7 இன்னிங்ஸ்களில் 21 சராசரி என்பது போதாது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி எத்தனையோ வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று எச்சரித்துள்ளார்.
மற்றொருவர், "மூன்றாந்தரமான சுழற்பந்து வீச்சாளரிடம் ஆட்டமிழந்துள்ளார். திறமையை ரன்களாக மாற்றவில்லை என்றால், அவர் உள்நாட்டுப் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாட முடியும்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
திறமை, நிதானம் என அனைத்தும் சாய் சுதர்சனிடம் இருந்தாலும், இதுபோன்ற எளிதான வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரன் குவிக்கத் தவறினால், அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இந்த விமர்சனங்களுக்கு சாய் சுதர்சன் தனது பேட்டால் பதிலடி கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.