டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பாலோ ஆன் கொடுத்திருப்பது தவறான முடிவு என பல கிரிக்கெட் விமர்சனங்கள் விமர்சித்திருக்கிறார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்திருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி வருகிறது. மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை விட 97 ரன்கள் தான் குறைவாக எடுத்திருக்கிறது.

கைவசம் எட்டு விக்கெட்டுகள் உள்ளது. பொதுவாக ஃபாலோ ஆன் கொடுப்பதை பல அணிகள் விரும்பாது. காரணம் பௌலர்கள் தொடர்ந்து பந்து வீசினால் அது அவர்களுடைய எனர்ஜியை பாதிக்கும். மேலும் உடல் அளவில் பல காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்கள் வீசி இருந்தார்கள்.
குல்தீப் யாதவ் முதலில் 27 ஓவர் கிட்ட வீசியிருந்தார்.ஜடேஜா 19 ஓவர் வீசி இருந்தார். இந்த நிலையில் வீரர்களுக்கு போதிய அளவு ஓய்வு கிடைத்திருக்க வேண்டுமென்றால், இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் பவுலர்களின் உடல் நிலையை ஒரு பொருட்டாக நினைக்காத கம்பீர், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்திருக்கிறார்.
இதனால் ஏற்கனவே அதிக ஓவர்கள் வீசி இருந்த பவுலர்கள் தற்போது மேலும் உடல் அளவில் சோர்வடைந்து, 49 ஓவர்கள் வீசி இருக்கிறார்கள். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை விட அதிக ஸ்கோர் அடித்து விட்டால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக கூட முடிவடையலாம். ஏனென்றால் கடைசி இரண்டு நாட்களில் எப்போதும் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த தருணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் கொடுத்திருப்பதன் மூலம் இந்தியா தான் கடைசி இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும் நிலை ஏற்படும். இதனால் இந்திய அணிக்கு பாதிப்பு கூட ஏற்படலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.