கொல்கத்தா: இந்திய அணியின் வெற்றிக்கு அளிக்கப்படும், சிறிய பெரிய அனைத்து பங்களிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தெரிவித்துள்ளார். நட்சத்திர வீரர் கலாச்சாரத்தை விமர்சித்த அவர், அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு பங்களிப்பும் அவசியம் என்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை வெற்றியின் போது, சிவம் தூபே அடித்த இரண்டு பவுண்டரிகளை, சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 97 ரன்களுக்கு இணையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
196 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு 10 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய தூபே, நான்கு பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு லெக் பைஸ் ரன்களைச் சேர்த்தார். சாம்சன், இறுதியில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 50 பந்துகளில் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.

தனிப்பட்ட பெரிய ஆட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய கம்பீர், தூபேவின் பவுண்டரிகள் இல்லையெனில், சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருக்காது என்றார். இது குறித்து பேசிய அவர், "ஒவ்வொரு பங்களிப்பைப் பற்றியும் நீங்கள் பேசுவது மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக, சில குறிப்பிட்ட பங்களிப்புகளைப் பற்றி மட்டுமே நாம் பேசியுள்ளோம்,"
"இது ஒரு அணி விளையாட்டு. என் பார்வையில், சிவம் அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள், சஞ்சுவின் 90 ரன்களுக்கு இணையானவை. அவர் பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சாம்சனின் 97 ரன்களைப் பற்றி நாம் பேசியிருக்கமாட்டோம். ஆம், அவர் சிறப்புமிக்க இன்னிங்ஸ் ஆடினார், ஆனால் சிறிய பங்களிப்புகளும் போட்டிகளை வெல்ல உதவும்," எனத் தெரிவித்தார்.
"பெரிய பங்களிப்புகள் தலைப்புச் செய்திகளாகும். ஆனால், அணிக்கு வெற்றி தேடித் தரக்கூடிய சிறிய பங்களிப்புகள் மிக முக்கியமானவை. நான் அணியில் இருக்கும் வரை, இதுவே எங்கள் அணியின் தத்துவமாக இருக்கும்," என கம்பீர் தனது எதிர்காலக் கொள்கையை விளக்கினார்.
இந்தக் கொள்கையை முன்னிறுத்தி, இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. வியாழக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தொடரில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.