கொல்கத்தா: 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையில் மேற்கு இந்தியத் தீவுகளை இந்தியா வீழ்த்தும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஹமது ஷெசாத் தெரிவித்துள்ளார். அப்படி இல்லை என்றால், தனது வேலையை ராஜினாமா செய்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா அரையிறுதிக்குச் செல்லாது என்ற சக வீரர் முகமது அமீரின் கணிப்பை அவர் மறுத்துள்ளார். இந்த ஆட்டம் இந்தியாவிற்கு ஒருவகை காலிறுதிப் போட்டியாக அமைகிறது.
ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த மோதலை ஒட்டி, ஷெசாத் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பணியில் இருந்து விலகுவதாகச் சூளுரைத்துள்ளார். இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தாவிட்டால் தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாகக் கூறிய அவர், இந்திய அணி இறுதிப் போட்டிக்குக்கூட முன்னேறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் பாகிஸ்தான் அணி வீரரான முகமது அமீரின் கணிப்புக்கு எதிராகவே ஷெசாத் இந்தச் சவாலை முன்வைத்தார். இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறாது என அமீர் தொடர்ச்சியாகக் கணித்து வந்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை விடச் சிறந்தவை என்றும் அவர் வாதிட்டார்.

"மேற்கு இந்தியத் தீவுகளால் இந்தியாவை மிக எளிதாக தோற்கடிக்க முடியும்," என அமீர் கூறினார். "போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது, பும்ராவைத் தவிர வேறு யாருமே அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசுவதாக நான் நினைக்கவில்லை. ஜிம்பாப்வே 184 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில், 7 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ், 180 ரன்கள் வரை சென்றது. இந்த அணி இந்தியாவை எளிதாகத் தோற்கடிக்கக் கூடும்," என்று அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.
ஷெசாத் ஆரம்பத்தில் பணிவுடன் அமீரின் கருத்திலிருந்து மாறுபட்டார். "நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா ஜெயிக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் அரையிறுதிக்குச் செல்வார்கள். இந்திய அணியை நாம் நிறைய விமர்சித்தாலும், அவர்கள் மிகவும் வலுவான அணி. மிகச் சிறந்த அமைப்பின் மூலம் வீரர்கள் உருவாக்கப்பட்டு, கடினமான சூழலுக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். பெரிய போட்டிகளில் அழுத்தத்தைக் கையாள அவர்களுக்குத் தெரியும்.
"பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய அழுத்தம் இல்லை. அதில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வென்றது. மேலும், கடந்த ஆட்டத்தில் ரன் ரேட்டைச் சரிசெய்து, வெற்றி பெற வேண்டும் என்று அறிந்திருந்தனர், அதைச் செய்தும் காட்டினார்கள். இது உலகக் கோப்பையை வெல்லத் தேவையான வலிமை, கம்பேக் தந்தது மன உறுதியைக் காட்டுகிறது. அவர்கள் அரையிறுதிக்கு மட்டுமல்ல, இறுதிப் போட்டிக்கும் செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார் ஷெசாத்.

"இந்தியா தகுதி பெற்றால், அமீரின் 'ஜோதிடர்' பட்டத்தை அகற்ற வேண்டும். இந்தியா அரையிறுதிக்குச் செல்லவில்லை என்றால், நான் இந்த இருக்கையிலிருந்து விலகுவேன். இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவேன்," என்று அவர் உறுதியாக அறிவித்தார்.