கொல்கத்தா: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது. வாழ்வா?சாவா? என்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் எட்டி இருக்கிறது.
இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில் அரை இறுதிச் சற்றுக்கு தகுதி பெற்றது குறித்து கேப்டன் சூரிய குமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு பின் பேசிய அவர், உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாங்கள் இன்று விளையாடிய விதம் எங்கள் வீரர்கள் தங்களுடைய திறனையும் குணத்தையும் காட்டியிருக்கிறார்கள். நாங்கள் இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறோம்.
எனவே அரை இறுதிக்கு செல்ல அனைத்து தகுதிகளும் எங்கள் அணிக்கு இருக்கின்றது. நான் எப்போதுமே சஞ்சு சாம்சனிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நல்ல மனிதர்களுக்கு, அவர்கள் காத்திருந்தால் எப்போதுமே நல்ல விஷயம் நடக்கும். சாம்சன் பல நாட்களாக காத்திருந்தார். அவருடைய கடும் உழைப்பும், மூடிய திரையில் அவர் மேற்கொண்ட பயிற்சி, அனைத்தும் இன்று வீண் போகவில்லை.
அதற்கான வெற்றிக்கனியை இன்று அவர் ருசிக்கின்றார். எங்கள் அணி வீரர்கள் இன்று பந்துவீச்சில் எங்களுடைய திட்டத்திற்கு ஏற்ற வகையில் பந்து வீசினார்கள். இந்த மைதானத்தில் 200 ரன்களை சேஸ் செய்வது என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும்.
எங்கள் அணி வீரர்களும் சின்ன சின்னதாக பார்ட்னர்ஷிப் சேர்த்து வெற்றியை நோக்கி நகர்த்தியதுதான் வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கின்றேன். சொந்த மண்ணில் விளையாடுவதால், எப்போதுமே நெருக்கடிகளும் அழுத்தமும் இருக்கும். ஆனால் களத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு தெரியும். நாம் சொந்த மண்ணில் விளையாடுவதால், நம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
எனவே தைரியமாக முடிவெடுங்கள். நேர்மறையான எண்ணத்துடன் களத்தில் செயல்படுங்கள் என்று நான் வீரர்களிடம் கூறி வருவேன். அழுத்தம் இல்லை என்றால் கொண்டாட்டமும் இல்லை. அழுத்தம் இருக்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் எல்லாம் பறக்கும். எனினும் இதை எப்படி நாம் புரிந்து கொண்டு எப்படி விளையாடுகிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது என சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.