டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய சாதனை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை எட்ட ஜடேஜாவுக்கு 10 ரன்களும், கேஎல் ராகுலுக்கு 111 ரன்களும் தேவையாக இருக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. கேஎல் ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் சதம் விளாசினர்.

அதேபோல் 2வது இன்னிங்ஸில் ஜடேஜா சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வரும் ஜடேஜா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலேயே அபாரமாக விளையாடி அசத்தினார். கடைசியாக ஜடேஜா விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 659 ரன்களை விளாசி இருக்கிறார்.
கேஎல் ராகுலுக்கும் 2025ஆம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ளது. சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசியதோடு, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்தே மிகச்சிறந்த ஃபார்மில் ஆடி வருகிறார். இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கேஎல் ராகுல் 11 சதங்கள், 19 அரைசதங்கள் உட்பட 3,889 ரன்களை குவித்துள்ளார்.
ஜடேஜாவும் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 27 அரைசதங்கள் உட்பட 3,990 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்ட வாய்ப்புகள் அமைந்துள்ளது. அதற்கு ஜடேஜாவுக்கு இன்னும் 10 ரன்களும், கேஎல் ராகுல்லுக்கு 111 ரன்களும் தேவையாக உள்ளது.
இந்த இருவ வீரர்களுமே மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கின்றனர். அதற்கேற்ப டெல்லி மைதான பிட்சும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலை விடவும் ஜடேஜா அதிக ரன்களை சேர்த்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.