டெல்லி: சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி 65 ஆண்டுகளில் முதல் முறையாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் முதல் ஐந்து விக்கெட்டுகளுக்கும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளது.
1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு அணி, முதல் ஐந்து விக்கெட்டுகளுக்கும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 1960 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற கப்பா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இந்தச் சாதனையை இந்திய அணி படைப்பது இது மூன்றாவது முறை மட்டுமேயாகும். இதற்கு முன்பு, 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராகவும், 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் மட்டுமே இந்த மைல்கல்லை இந்தியா எட்டியிருந்தது. தற்போது, அந்தப் சாதனைப் பட்டியலில் இந்தப் போட்டியும் இணைந்துள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை, முதல் ஐந்து விக்கெட்டுகளுக்கும் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் விவரம் -

முதல் நாள் அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாம் நாளில் 175 ரன்களில் ரன் அவுட் ஆனபோதும், கேப்டன் சுப்மன் கில் சிறிதும் நிதானம் இழக்கவில்லை. தனது பொறுப்பை உணர்ந்து, 196 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இளம் வீரர்களான நிதிஷ் குமார் ரெட்டி (43) மற்றும் துருவ் ஜுரல் (44) ஆகியோருடன் இணைந்து அவர் அமைத்த முக்கியமான பார்ட்னர்ஷிப்கள், அணியின் ஸ்கோர் 500-ஐ கடக்க உதவியது.
இரண்டாம் நாளில் மட்டும் 44.2 ஓவர்களில் 200 ரன்களைச் சேர்த்தது இந்திய அணி. துருவ் ஜுரல் ஆட்டமிழந்ததும், 518 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. தனிப்பட்ட சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், கேப்டன் சுப்மன் கில் இன்னும் ரன் குவிக்க முடியும் என்ற நிலையில் டிக்ளேர் செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 எடுத்து தடுமாறியது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார்.