டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அஸ்வின் கோரிக்கை வைத்திருக்கிறார். சாய் சுதர்சன் திறமைமிக்க வீரர் என்று கூறியுள்ள அஸ்வின், தேவ்தத் படிக்கல் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

2வது டெஸ்ட் போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதனிடையே டெல்லி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் போட்டியில் சுவாரஸ்யம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், டெல்லியில் கிடைக்கும் வாய்ப்பை சாய் சுதர்சன் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவர் திறமையான வீரர். அதனால் நிச்சயமாக இந்தப் போட்டியில் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன்.
ஒருவேளை சாய் சுதர்சன் ரன்கள் சேர்க்கவில்லை என்றால், அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்திய அணியில் இடம் பிடிக்க பலரும் தீவிரமாக உள்ளனர். அதனால் சாய் சுதர்சனுக்கு இது மிக முக்கியமான டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். எப்போதும் வெற்றி பெறும் அணியை மாற்றக் கூடாது என்பார்கள்.
அதேபோல் சாய் சுதர்சன் தொடர்பாக ஏராளமான பேச்சுகளும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் சாய் சுதர்சன் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்க வேண்டும். இங்கிலாந்து போன்ற சவாலான ஆடுகளில் ரன்களை சேர்த்திருக்கிறார். தேவ்தத் படிக்கல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதை நன்றாக அறிவேன்.
ஆனால் சாய் சுதர்சன் மனதளவில் வலிமையான வீரர். அவர் இந்திய அணியில் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் சாய் சுதர்சன் இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ள மீண்டும் இப்படியொரு டெஸ்ட் தொடர் கிடைக்கவே கிடைக்காது என்றுதான் சொல்வேன் என்று கூறியுள்ளார்.