டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முச்சதம் விளாச முயற்சிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே அட்வைஸ் செய்துள்ளார். ஜெய்ஸ்வால் ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரிய இன்னிங்ஸை விளாசுவார் என்று கூறியுள்ள கும்ப்ளே, ஒவ்வொரு நாளும் ஜெய்ஸ்வாலின் திறமை வளர்ந்து கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 22 பவுண்டரிகளுடன் 173 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

இதன் மூலமாக 5வது முறையாக 150 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார். 2வது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதத்தை விளாச வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, ஜெய்ஸ்வால் இப்படியொரு வாய்ப்பை பயன்படுத்தி முச்சதம் அடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக அனில் கும்ப்ளே பேசுகையில், ஒவ்வொரு நாளும் ஜெய்ஸ்வால் வளர்ந்து கொண்டே இருக்கிறார். ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கும் போது ஜெய்ஸ்வாலின் தீவிரத்தன்மை மற்றும் அவரின் குணாதிசியம் ஆகியவை பற்றி பேசி இருக்கிறோம். கடந்த போட்டியில் கூட சிறந்த தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும், ஜெய்ஸ்வால் எந்தவொரு வாய்ப்பையும் வீணடிக்க மாட்டார். நல்ல தொடக்கம் கிடைத்துவிட்டால் போதும்.. ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 2வது நாளிலும் ஜெய்ஸ்வால் களத்தில் இருப்பார் என்பதால், பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும்.
நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் மட்டுமல்ல.. முச்சதம் கூட அடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் இந்த பிட்சில் ரன்களை குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால், இதுவரை 2 இரட்டை சதத்தை விளாசி இருக்கிறார். இதனால் கருண் நாயருக்கு பின் ஜெய்ஸ்வால் முச்சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.