மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கருண் நாயர் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டியர் கிரிக்கெட் என்று எக்ஸ் தளத்தில் கருண் நாயர் பதிவிட்டது ட்ரெண்டான நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூடுபிடித்துள்ள நிலையில், பிசிசிஐ நிர்வாகம் அடுத்த டெஸ்ட் தொடர் மீது கவனத்தை திருப்பி இருக்கிறது. அடுத்ததாக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அக்டோபர் 2 முதல் அக்டோபர் 6 வரை முதல் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் அக்டோபர் 14 வரை நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத சூழலில், துருவ் ஜுரெல் முதன்மை விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து கருண் நாயரை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயர் 4 போட்டிகளில் ஆடிய போதும், ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். இதனால் கருண் நாயர் இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கலை விளையாட வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார். ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் ஒரு போட்டியில் விளையாடி இருந்தார். இதனால் தேவ்தத் படிக்கலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல் சாய் சுதர்சனை நம்பர் 3ல் களமிறக்கி தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிதீஷ் குமார் ரெட்டியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்து வாய்ப்பு அளிக்க கம்பீர் முடிவு எடுத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டி மோசமாக செயல்பட்டாலும், அவரின் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது.
இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடிய வீரர்களில் கருண் நாயர் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர்களுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்படலாம். இதன் மூலமாக இந்திய அணி முழுமையாக இளம் வீரர்களை கொண்ட படையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.