அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் வெறும் 41 ரன்கள் தான் பின்தங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி பெரிய ஸ்கோர் குவிக்கும் உத்வேகத்தின் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல வேண்டும் என்றால் சொந்த மண்ணில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் நடப்பாண்டில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில் அகமதாபாத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இதில் சிராஜ் மற்றும் பும்ராவின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஆல்ரவுண்டர் ஜஸ்டின் கிரீ ஸ் 32 ரன்களும், சாய் ஹோப் 26 ரன்களும் எடுத்தனர்.
இதை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடியது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் அதிரடி காட்ட முயற்சித்த ஜெய்ஸ்வால் 54 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதுபோன்று சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்டில் முதல் முறையாக களமிறங்கிய சாய் சுதர்சன் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். எனினும் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார்.
அதேபோன்று கேப்டன் கில்லும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருக்கிறது. இது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை விட வெறும் 41 ரன்கள் தான் குறைவாகும். இன்னும் நான்கு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருப்பதால் முதலில் இந்திய அணி ஒரு 400 ரன்களுக்கு மேல் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த முயற்சி செய்யும்.