சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணியை இந்திய அணி அபாரமாக வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது. இருப்பினும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபேவின் பந்துவீச்சு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பாணியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் குவித்தது. ஆனால், பந்துவீச்சின் போது ஆறாவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட சிவம் துபே, தான் வீசிய 2 ஓவர்களிலேயே 46 ரன்களை வாரி வழங்கினார். இதில் 4 வைடு பந்துகளும், 2 நோ பால்களும் அடங்கும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே அதிக ரன்களைக் கொடுத்த மோசமான சாதனையை இவர் படைத்தார்.

சிவம் துபேவின் இந்த மோசமான பந்துவீச்சு குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் காரசாரமாகப் பேசியுள்ளார். "இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தது. ஆனால், ஆறாவது பந்துவீச்சாளராக வந்த சிவம் துபேவின் செயல்பாடுதான் எனக்குக் கவலையளிக்கிறது.
அவர் எங்கு பந்துவீசினார் என்று பார்த்தீர்களா? ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே மிகத் தொலைவில் அதாவது 6வது ஸ்டம்ப் லைனில் அவர் பந்துவீசிக் கொண்டிருந்தார். இது போன்ற ஒரு மோசமான பந்துவீச்சை நான் பார்த்ததே இல்லை. அவருக்குப் பந்துவீச்சில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று ஸ்ரீகாந்த் விளாசினார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்திய அணி ஏற்கனவே இமாலய ஸ்கோரை எட்டியிருந்ததால், சிவம் துபேவுக்குப் பந்துவீச்சு பயிற்சி அளிக்கவே கேப்டன் சூர்யகுமார் யாதவ் விரும்பியிருப்பார். அந்த நேரத்தில் நெட் ரன் ரேட் பற்றிய கவலை இல்லை என்பதால், வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு அவருக்குப் பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டி குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "தென்னாப்பிரிக்காவிடம் தோற்றபோதே நான் சொன்னேன், இந்திய அணி நிச்சயம் மீண்டு வரும் என்று. இது ஒரு வலுவான அணி. அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசுகிறார்கள். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியாவும் நன்றாகச் செயல்படுகிறார்கள்.

எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நமக்குச் சிவம் துபே போன்ற ஆறாவது பந்துவீச்சாளர் தேவையே இல்லை. 5 பந்துவீச்சாளர்களை வைத்தே சமாளிக்கலாம். அரையிறுதியில் தேவைப்பட்டால் மட்டும் 6வது பந்துவீச்சாளர் பற்றி யோசிக்கலாம்" என்று ஆலோசனை வழங்கினார். சிவம் துபேவின் இந்தத் தடுமாற்றம், அடுத்த போட்டியில் அவருக்குப் பந்துவீசும் வாய்ப்புக் கிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.