கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று கணித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்றே இறங்கி வந்துள்ளார். சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ள அவர், அதேநேரத்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாகச் சிறப்பாக விளையாடவில்லை என்று மீண்டும் விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக இந்தியா அரையிறுதிக்குச் செல்லாது என அமீர் கூறியிருந்ததால், இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகமது அமீர், சஞ்சு சாம்சனை வெகுவாகப் பாராட்டினார். "என் கணிப்பை இந்திய அணி பொய்யாக்கிவிட்டது என்று நீங்கள் கூறலாம். ஆனால், யாருக்குப் பாராட்டு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு அதை நிச்சயம் கொடுக்க வேண்டும். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் மற்றும் பிற போட்டிகளில் அவரது பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். ஆனால், தோற்றால் வெளியேற வேண்டும் என்ற நாக் அவுட் போட்டியில், இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் அவர் ஆடிய இந்த ஆட்டம் மிகவும் சிறப்பானது" என்று கூறினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் சிறந்த அடித்தளம் அமைக்க, ரோவ்மன் பவல் 19 பந்துகளில் 34 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 196 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணியில் முன்னணி பேட்டர்கள் கைவிட்ட நிலையில், சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரிய போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்பட மாட்டார் என்ற விமர்சனங்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதை சுட்டிக்காட்டி ஒரு தனிநபரின் சிறப்பான ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த தவறுகளையும் மறைத்துவிடாது என்று அமீர் சுட்டிக்காட்டினார். இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்துக் குறைகூறிய அவர், "நான் இதை முற்றிலும் கிரிக்கெட் கோணத்தில் இருந்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை இப்போதும் சொல்கிறேன்."
"அவர்களின் ஃபீல்டிங்கை கவனித்துப் பாருங்கள். மூன்று முதல் நான்கு கேட்சுகளைத் தவறவிட்டனர், ஃபீல்டிங்கிலும் தடுமாறினர். பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் அதிக ரன்களை வாரி வழங்குகின்றனர். இந்திய அணி ஒரே ஒரு பந்துவீச்சாளரின் பலத்தை மட்டுமே நம்பி விளையாடி வருகிறது" என்று அமீர் விமர்சித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய வெற்றியின் உத்வேகத்துடன் இந்திய அணி, மார்ச் 5ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி, முகமது அமீரின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.