டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் இருக்கின்றது. ஐந்தாவது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 58 ரன்களே தேவைப்படுகிறது.
கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் உள்ளன. களத்தில் ராகுல் 25 ரன்களுடனும், சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் உள்ளனர். இந்த தொடரை இந்திய அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக மாறிவிடும்.

இந்த நிலையில் இந்திய அணியில் செயல்பாடு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தோதா கணேஷ் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் முதல் டெஸ்ட் போட்டியில் நிதீஷ் குமாருக்கு வெறும் நான்கு ஓவர்கள் தான் தரப்பட்டது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவர் கூட நிதிஷ் குமாருக்கு தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது நிதிஷ்குமாரை நீங்கள் எப்படி ஆல் ரவுண்டர் என்ற இடத்திற்கு தயார் செய்வீர்கள்.
அவருக்கு ஏன் நீங்கள் பௌலிங் தரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். தோடா கணேசின் இந்த கேள்வி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 81 புள்ளி 5 ஓவர்கள் வீசியது.இதில் ஒரு ஓவர் கூட நிதிஷ் குமாருக்கு தரப்படவில்லை. இதனை அடுத்து ஃபாலோ ஆன் குறித்து மீண்டும் இந்திய வீரர்கள் பந்து வீசியபோது கூட ஒரு மாற்று பவுலராக வரக்கூட நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை.
ஆனால் ஜெய்ஸ்வால் ஒரு ஓவர் வீசி மூன்று ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் தமக்கு பந்து வீசவும் தெரியும் என்பதை கம்பீரிடம் காட்டி இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.சச்சின், ஷேவாக் உள்ளிட்ட வீரர்கள் போல் சுழற் பந்து வீச தெரிந்த தொடக்க வீரர்கள் அணிக்கு தேவை என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.