மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் எட்டு போட்டியில் இந்தியாவின் முக்கிய சவாலை முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், சுட்டிக்காட்டியுள்ளார். கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் இப்போட்டியில், அபிஷேக் ஷர்மாவுக்கு ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக லெக்-சைடில் ஷாட்கள் இல்லாதது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா டாப் ஆர்டரில் இருப்பதால், மேற்கிந்தியத் தீவுகளின் ஆஃப்-ஸ்பின்னர் ரோஸ்டன் சேஸ் பவர் பிளேயில் பந்துவீசுவார் என அவர் கணித்துள்ளார்.இந்தத் தொடரில் அபிஷேக் ஐந்து போட்டிகளில் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்து, சராசரி 14 ஆக உள்ளது. அவரது ஆட்டத்திறன் மந்தமாகவே உள்ளது. மாறாக, இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி, 214 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 35க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட் 186க்கு மேலும் உள்ளது.

தனது யூடியூப் சேனலில், பேசிய அஸ்வின். "அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்றாலும், அவர்களுடைய ஆடும் விதம் வேறுபடும். சேஸ் இருவருக்கும் எதிராக வெவ்வேறு அணுகுமுறையைக் கையாள வேண்டும். ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக அபிஷேக்கின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 85 தான்" என்றார்.

"ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சில் அபிஷேக்கிற்கு லெக்-சைடில் ஷாட்கள் இல்லை. அவர் முன்னால் வந்து அடிக்க முயலும்போதெல்லாம், பந்துவீச்சாளர்கள் அவரது பேடில் முழுவதுமாக பந்துவீசுகின்றனர். இதனால், லெக்-சைடில் அடிப்பதை நோக்கி ஆஃப்-ஸ்பின்னர்கள் அவரை தூண்டினாலும், அங்கே அவருக்கு ஷாட்கள் இல்லை" என்று விளக்கினார்.
"அபிஷேக்கின் விருப்பமான ஷாட் கவர்ஸ் திசையில் இன்சைட் அவுட் அடிப்பதுதான். அவருக்கு ஸ்வீப் ஷாட் இல்லாததால், ஸ்கொயர் லெக் பவுண்டரியை அவரால் அணுக முடியாது. லாங்-ஆன் மற்றும் டீப் மிட்-விக்கெட் போன்ற பகுதிகளிலும் ரன் சேர்க்கும் வாய்ப்புகள் அவருக்குக் குறைவு" என்றார்.
"கிஷனின் கால்களுக்கு நேராக பந்துவீசினால், அவருக்கும் ஸ்கொயர் லெக் பகுதியை நோக்கிய ஷாட்கள் இல்லை. இருப்பினும், அவர் பிட்ச்சில் முன்னேறி வந்து பந்தை நேராக அடித்து நொறுக்கும் திறமை கொண்டவர்" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக அபிஷேக் – கிஷன் ஜோடி தடுமாறியதால், இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான தங்கள் முந்தைய போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றியது. அதில், வலதுகை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், அபிஷேக்குடன் துவக்க வீரராக களமிறங்க, இஷான் கிஷன் மூன்றாவது இடத்திற்கு இறக்கப்பட்டார்.

அபிஷேக் மற்றும் இஷான் கிஷனின் ஆஃப்-ஸ்பின்னுக்கு எதிரான பலவீனங்களை அஸ்வின் எடுத்துரைத்தாலும், ரோஸ்டன் சேஸுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். இந்த இருவருக்கும் எதிராக தெளிவான திட்டங்கள் இல்லாவிட்டால், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக மாறுவார்கள் என அஸ்வின் கூறினார். இந்தியா , மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இந்த போட்டி வாழ்வா சாவா போட்டியாகும். இதில் தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும், வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.