டெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்தார். இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், விராட் கோலிக்கு அடுத்த மூத்த வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜா இதுவரை டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டதில்லை.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றபோது, இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் தீவிரமாக எழுந்தது. அப்போது, முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜாவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கேப்டனாக நியமிக்கலாம் என்று தனது கருத்தை முன்வைத்தார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் காயமடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தத் தொடருக்கு ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கேப்டன் ஆகும் லட்சியம் இன்னும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உடனடியாகப் பதிலளித்த ஜடேஜா, "இல்லை சார். நான் அதைப்பற்றி இப்போது சிந்திப்பது கூட இல்லை. அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது, அணிக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தனது தற்போதைய பங்கு குறித்து மேலும் விளக்கிய அவர், "ஒரு இளம் வீரர் என்னிடம் வந்து கேட்டால், உதாரணமாக குல்தீப் யாதவ் பந்துவீச்சு குறித்துக் கேட்கும்போதோ, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப எப்படி ஆட வேண்டும் என்று கேட்கும்போதோ, எனது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். அதுவே என் தற்போதைய பங்கு. கேப்டன்சி, துணை கேப்டன்சி போன்ற பதவிகளைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. எனக்குக் கிடைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.
இந்தப் போட்டியில் டெல்லி ஆடுகளத்தின் மந்தமான தன்மை குறித்துப் பேசிய ஜடேஜா, "இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் கேட்டது போலவே மெதுவாகத் திரும்பும் ஆடுகளம் (slow turner) அமைக்கப்பட்டுள்ளது. போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் இன்னும் அதிகமாகத் திரும்பும். நாங்கள் கடினமாக உழைத்துப் பந்துவீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல முடிவைப் பெற முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவுக்கு ஜடேஜா முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.