மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினை மிஸ் செய்கிறேன் என்று ரவீந்திர ஜடேஜா கூறிய வார்த்தைக்கு அஸ்வின் பதில் அளித்துள்ளார். புஜாரா இல்லாத போது நான் எப்படி உணர்ந்தேனோ, அப்படிதான் இப்போது ஜடேஜா உணர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போதே ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக ரவி இந்திரனும், ரவிச்சந்திரனும் இணைந்து விளையாடி வந்தனர். அப்போது ஜடேஜாவுக்கு ஏராளமான அட்வைஸ்களையும், திட்டங்களையும் அஸ்வின் வகுத்து கொடுப்பார்.

தற்போது ஜடேஜா சொந்தமாக திட்டங்களை உருவாக்கி ஜூனியர் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதோடு, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது ஜடேஜா பேசுகையில், அஸ்வினை அதிகமாக மிஸ் செய்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது, ஏதோவொரு இடத்தில் அஸ்வின் பவுலிங் செய்வார் என்று தோன்றியது. ஆனால் திடீரென அஸ்வின் ஓய்வு பெற்றுவிட்டார் என்ற நிஜம் முகத்தில் அடிக்கிறது என்று தெரிவித்தார். ஜடேஜாவின் இந்த வார்த்தைகள் இந்திய அணி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், ஒருவேளை நானும் இந்தப் போட்டியில் விளையாடி இருந்தால் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன். அதிலும் ஜடேஜா வீழ்த்திய விக்கெட்டுகளில் பங்கு போட்டிருப்பேன். அதனால் அவர் என்னை மிஸ் செய்யக் கூடாது. நான் இல்லாத போது, என்ன செய்ய முடியுமோ, அதனை ஜடேஜா முழுமையாக பயன்படுத்தி அற்புதங்களை செய்ய வேண்டும்.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக உயர்ந்து கொண்டே வருகிறார். அவரை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். என் மீதான அன்பால் இப்படி சொல்கிறார் என்று தெரிகிறது. எல்லாவற்றையும் விட, ஜடேஜாவுக்கு இப்போது பேசுவதற்கு யாரும் இல்லை என்று தோன்றுகிறது. அத்தனை வீரர்களும் புதியவர்கள். நாங்கள் இணைந்து விளையாடும் போது, சின்னச் சின்னதாக பேசிக் கொள்வோம்.
சில நேரங்களில் சூப்பர் சீனியரை போல் செயல்படுவேன். ஆனால் இளம் வீரர்களிடம் பேசும் போது கொஞ்சம் சிந்தித்து பேச வேண்டும். ஏனென்றால் சீனியரை எளிதாக எடை போட்டு விடக் கூடியவர்கள். இளம் வீரர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் ஜடேஜாவுக்கு தோன்றலாம். புஜாரா இல்லாத போது நானும் இப்படிதான் இருந்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து அதிகமாக பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.