சென்னை: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் முக்கிய ஆட்டத்தில் விளையாடுவதற்காக, தனது தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு ரிங்கு சிங் இந்திய அணியுடன் மீண்டும் இணையவுள்ளார். தந்தையை இழந்த துக்கத்திலும் நாட்டுக்காக விளையாடு அவர் எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங், கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவு ரிங்கு சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தை இறந்த செய்தி அறிந்ததும், சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணியுடன் இருந்த ரிங்கு சிங் உடனடியாக தனது சொந்த ஊரான அலிகாரிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு வெள்ளிக்கிழமை அவரது தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தந்தையை இழந்து வாடும் ரிங்கு சிங்கிற்கு பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் சக வீரர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தந்தையின் இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மிக முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காக ரிங்கு சிங் சனிக்கிழமை கொல்கத்தா புறப்படுகிறார். அங்கு அவர் இந்திய அணியுடன் இணைவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இக்கட்டான சூழ்நிலையிலும் அணியின் நலன் கருதி அவர் எடுத்துள்ள இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளம் வயதில் தனது தந்தை இறந்த மறுநாளே ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடியது வரலாறு. தற்போது அதேபோன்ற ஒரு சூழ்நிலையை ரிங்கு சிங் எதிர்கொண்டுள்ளார். இந்தக்கட்டான நேரத்தில் விராட் கோலி ரிங்கு சிங்கிற்குத் தேவையான மன உறுதியையும் ஆறுதலையும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்குச் செல்ல இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஈடன் கார்டன்ஸ் மைதானம் ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங்கின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இங்கு அவர் பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அணியின் சமநிலை கருதி ரிங்கு சிங்கிற்குப் பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும், தந்தையை இழந்த சோகத்திலும் அணியுடன் இணைய வரும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் முடிவு செய்வார்கள்.
