மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சனின் திறமை என்னவென்று எங்களுக்கு தெரியும் என அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆன ஷிட்டான்சு கோட்டாக் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதில் ஜெயஸ்வால் 173 ரன்கள் எடுத்து களத்தில் உள்ள நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மூன்றாவது வீரராக களமிறங்கி 87 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் 13 ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஷிட்டான்சு கோட்டாக், சாய் சுதர்சனை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "சாய் சுதர்சன் எவ்வளவு திறமையான வீரர் என்று எங்களுக்கு தெரியும். சில சமயம், வீரர்கள் எத்தனை ரன்கள் அடிக்கிறார் என்பதை பார்க்காமல் அவர் திறமையானவரா? எப்படி பேட்டிங் செய்கிறார்? எப்படி இன்னிங்ஸை கட்டமைக்கிறார் என்பதை தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் சில இன்னிங்ஸ்களில் தடுமாறுவார்கள்."
"இன்று சாய் சுதர்சன் பொறுத்தவரை, பட்டையை கிளப்பினார். அவர் மனதளவில் மிகவும் கடினமானவர். அவர் எப்போதும் அழுத்தத்தில் விளையாடியதே கிடையாது. அவருடைய திறமை என்னவென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். சாய் சுதர்சன் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார். அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அதிக அளவு விளையாடியிருக்கிறார்."
"சுழற்பந்து வீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் அவர் சில ஷாட்டை அவர் பேக் ஃபுட்டில் இருந்து ஆடுகிறார். இப்படி பலரும் விளையாடி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். சில சமயம் ஃபுல் லெங்த் பந்துகளை பேக் ஃபுட் எடுத்து அவர் ஆடுகிறார். அதை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவரிடம் பேசுவோம். இது அவருக்கே நன்றாக தெரியும்" என்று பேட்டிங் பயிற்சியாளர் ஷிட்டான்சு கோட்டாக் தெரிவித்துள்ளார்.