டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், ஒரு நம்பமுடியாத கேட்சைப் பிடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், அந்தக் கேட்ச்சின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்ய மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸின் 8-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் அடித்த பந்து, 'பார்வர்டு ஷார்ட் லெக்' திசையில் நின்று கொண்டிருந்த சாய் சுதர்சன் மீது புயல் வேகத்தில் பாய்ந்தது.
சற்றும் எதிர்பாராத அந்த ஷாட்டை, தனது அபாரமான ரிஃப்ளெக்ஸ் திறமையால் எதிர்கொண்ட சாய் சுதர்சன், தனது ஹெல்மெட், கைகள் மற்றும் மார்புக்கு இடையே பந்தை சிக்க வைத்து ஒரு நம்பமுடியாத கேட்சைப் பிடித்தார். ஆனால், அந்த வேகத்தில் பந்து உடலில் ஏற்படுத்திய தாக்கத்தால் (Impact) சாய் சுதர்சன் வலியால் துடித்தார்.

இந்த நிலையில், சாய் சுதர்சனின் காயம் குறித்து பிசிசிஐ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில், "இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது கேட்ச் பிடிக்க முயன்றபோது, சாய் சுதர்சனுக்கு பந்தின் தாக்கத்தினால் காயம் (Impact Injury) ஏற்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் இன்று (மூன்றாம் நாள்) ஃபீல்டிங் செய்யக் களமிறங்கவில்லை. காயம் தீவிரமானதல்ல, அவர் நலமாக இருக்கிறார். பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து இருக்கிறார்" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தனது அபாரமான கேட்ச்சால் அனைவரையும் கவர்ந்த சாய் சுதர்சன், முதல் நாள் ஆட்டத்தில் தனது பேட்டிங்கால் இந்திய அணிக்கு வலு சேர்த்தார். இந்தப் போட்டியில் 87 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
தனது முதல் டெஸ்ட் சதத்தை 13 ரன்களில் தவறவிட்டாலும், ஆட்டம் குறித்துப் பேசியபோது, "நான் இன்று செய்ததற்கு நன்றியுள்ளவனாக இருந்தாலும், நம் மனதில் எப்போதும் ஒரு குரங்கு சத்தம் அதிகமாகக் கேட்கும். அது சதத்தைக் கேட்கும், அதனால் நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தேன்" என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து இருந்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆனை தவிர்க்கவே போராட்டத்தை நடத்தியது. எனவே, சாய் சுதர்சன் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக இருக்காது.