மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது வீரராக களம் இறங்கும் சாய் சுதர்சன் 87 ரன்கள் அடித்து 13 ரன்களில் சதத்தைத் தவறவிட்டார். இதன் மூலம் சாய் சுதர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இன்னும் சாய் சுதர்சன் குறித்து பேசிய கவாஸ்கர் எட்டு ரன்களில் ஆட்டம் இழப்பதற்கு பதில் 87 ரன்கள் அவர் எடுத்திருப்பது நல்ல ஸ்கோர் தான்.
இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களுடன் பேசிய சாய் சுதர்சன் தனது இன்னிங்ஸிற்கு ஜெய்ஸ்வாலுக்கு நன்றி தெரிவித்தார்." நானும் ஜெய்ஸ்வாலும் இன்று நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அணிக்கு நான் அடித்த ரன்கள் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்."

"நான் ரன் சேர்க்க வேண்டும் என்று யோசிக்கவே இல்லை. சொல்லப்போனால் நான் மனதளவில் எந்த சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடினேன். இந்த இன்னிங்ஸில் என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தினேன். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு அதன்பின் ரன்கள் சேர்த்தேன். முதலில் என்ன நடக்கிறது என பார்த்தேனே தவிர, இது நடந்து தீர வேண்டும் என்று எந்த ஒரு முயற்சியும் நான் செய்யவில்லை. சதத்தை தவறவிட்டாலும் 87 ரன்கள் அடித்ததை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன்."
"இன்று களத்தில் நான் செய்த விஷயத்திற்கு எப்போதும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால் என் மனம் எப்போதுமே ஒரு குரங்கு மாதிரிதான்.அது எப்போதும் அதிகம் வேண்டும் என்று தான் கேட்கும். இன்று கூட அது சதத்திற்கு மேல் கேட்டது. இதனால் இனிவரும் காலங்களில் அதிக ரன்கள் அடிக்க நான் எதிர்நோக்கி காத்திருப்பேன் . ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்தது மிகவும் பிரமாதமாக இருந்தது. மறுமுனையில் இருந்து அவருடைய பேட்டிங்கை பார்க்க ஆச்சரியமாக இருந்தது."
"அவர் ஆடிய ஷாட்கள் எல்லாம் அபாரமானது. சில நல்ல பந்துகளை கூட அவர் பவுண்டரிக்கு அடித்தார். மேலும் எந்த மாதிரி ஷாட்களை ஆட வேண்டும் என்று எனக்கு அவர் அறிவுறுத்தினார். நான் இங்கு யாருடனும் போட்டி போடவில்லை. இங்கு நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.எந்த ஷாட்டுகளை ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து கற்கின்றேன்.ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் கொஞ்சம் குறைவாகத் தெரிகிறது .இரண்டாம் நாள் ஆட்டத்தில் இருந்து பந்து கொஞ்சம் திரும்பும் என்று நினைக்கின்றேன்" என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார்.