மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை விட, அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது பெரிய சவால் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக சாய் சுதர்சன் மாறிவிடுவாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன தமிழக வீரர் சாய் சுதர்சன் அப்போது ரன் குவிக்கத் தவறினார். தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென், சாய் சுதர்சனுக்கு மறைமுகமாக எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடுத்த போட்டியில் அவர் ரன் குவிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரியான் டென் டஸ்கே, சாய் சுதர்சனின் ஃபார்ம் குறித்துப் பேசினார். அப்போது, இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டி எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
"சாய் சுதர்சன் எந்த மாயையிலும் இல்லை என்று நினைக்கிறேன். இந்திய அணியில் ஒரு இடத்திற்காக நீங்கள் போராடித்தான் ஆக வேண்டும் என்ற உண்மையை மறைக்க முடியாது. கருண் நாயரின் நிலையைப் பார்த்தீர்கள் அல்லவா? இங்கிலாந்தில் அவருக்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் கிடைத்தன. தற்போது சாய் சுதர்சன் இருக்கும் அந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்க, எண்ணற்ற சிறந்த வீரர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று ரியான் டென் கூறினார்.

இந்திய கிரிக்கெட்டை உற்று நோக்குபவர்களுக்கு, கருண் நாயரின் உதாரணம் எவ்வளவு பெரிய எச்சரிக்கை என்பது தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிறகும், அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் ஆடி ஒரு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார். அதனால் தற்போது டெஸ்ட் அணி வாய்ப்பை இழந்து இருக்கிறார்.
அந்த உதாரணத்தைச் சுட்டிக்காட்டியதன் மூலம், "திறமை மட்டும் போதாது, தொடர்ந்து ரன் குவிக்க வேண்டும், இல்லையென்றால் வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வந்துவிடுவார்" என்ற செய்தியைச் சாய் சுதர்சனுக்குத் இந்திய அணி நிர்வாகம் கூறி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி பலவீனமாக இருக்கும் நிலையில் அந்த அணிக்கு எதிராகவும் சாய் சுதர்சன் ரன் குவிக்கவில்லை என்றால் பெரும் பின்னடைவை சந்திப்பார்.
ஒருபுறம் எச்சரிக்கை விடுத்தாலும், மறுபுறம் சாய் சுதர்சன் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ரியான் டென் குறிப்பிட்டார். "நாங்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் அந்த மூன்றாவது வரிசைக்கு சரியானவர் என்பதை நாங்கள் அறிவோம். இப்போது அவர் செய்ய வேண்டியதெல்லாம், களத்திற்குச் சென்று இயல்பாக பேட்டிங் செய்வதுதான். ரன்களைக் குவித்து, இந்த நாட்டிற்கும், அணிக்கும் அந்த இடத்திற்குத் தான் தகுதியானவன் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்."
"நிச்சயமாக, நாங்கள் எந்தப் பீதியிலோ அல்லது கவலையிலோ இல்லை. குறிப்பாக, வெற்றி பெறும் அணியில் இதுபோன்ற ஒரு வீரரின் தனிப்பட்ட சரிவை உள்வாங்கிக் கொள்ள முடியும்" என்று அவர் கூறினார். இந்திய அணி நிர்வாகம் சாய் சுதர்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இறுதி வாய்ப்பை வழங்க உள்ளது. உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் ரன் மழை பொழிந்த சாய் சுதர்சன், இந்த பரீட்சையில் வென்று, தனது டெஸ்ட் கிரிக்கெட் கனவை நனவாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.