மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை டெல்லியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் மூன்றாவது வீரராக களம் இறங்கும் சாய் சுதர்சன் தொடர்ந்து தடுமாறி வருவதாகவும் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தவில்லை
என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சாய் சுதர்சன் மாற்றப்படுவாரா என்று கேப்டன் சுப்மன் கில்லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் அளித்த கேப்டன் கில், சாய் சுதர்சனுக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், சாய் சுதர்சன் ஒன்றும் மோசமாக விளையாடுவது போல் எனக்கு தெரியவில்லை.

அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அவர்கள் விளையாடினார். லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் பந்து கடுமையாக ஸ்விங் ஆனது. அதை எதிர்கொண்டு 40 ரன்கள் அவர் சேர்த்தார். அதற்கு முன்பு மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து இருந்தார். அனைவருமே அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே அதிக ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே இளம் வீரர்களுக்கு கொஞ்சம் நேரம் தரப்பட வேண்டும். இதன் மூலம் தங்களுடைய ஆட்டத்தை அவர்கள் கண்டறிய முடியும். ஒரு இன்னிங்ஸ் அல்லது மூன்று நான்கு போட்டிகளை வைத்து ஒரு வீரரை எடை போடாதீர்கள். நாங்கள் சாய் சுதர்சனின் திறனை முழுமையாக கண்டு கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் நம்புகிறோம். ஒரு ஏழு, எட்டு போட்டிகள் விளையாடிய பின் அவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள்.
எதில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது குறித்து யோசிக்கலாம். ஆனால் தற்போது வரை சாய் சுதர்சன் தான் மூன்றாவது வீரராக களமிறங்குவதற்கு சரியான நபர் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதுவும் நீண்ட காலம் அந்தப் பணியை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கில் தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் செயல்பட்டு வரும் நிலையில் அவருடன் சாய் சுதர்சன் தொடக்க வீரராக களமிறங்கினார். கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சாய் சுதர்சன் 15 போட்டிகளில் விளையாடி 759 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சாய் சுதர்சன் 7 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 147 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.